சுங்கை சிப்புட், 14 ஜூலை (பெர்னாமா) -- பேராக் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே மொழியோடு இலக்கிய ஆற்றலையும் மேம்படுத்தும் விதமாக, இவ்வாண்டுக்கான 'வளர்தமிழ் விழா' இன்று சுங்கை சிப்புட் மாவட்டத்தைச் சேர்ந்த ஈவுட் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் 24ஆவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் ஒட்டுமொத்த வெற்றியாளராக கோலகங்சார் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
கவிதை ஒப்புவித்தல் போட்டியில் சங்காட் தமிழ்ப்பள்ளி முதல் நிலையிலும் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி இரண்டாவது நிலையிலும் வெற்றி பெற்ற வேளையில்...
சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை வென்றது.
திறக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் சிலிம் ரிவர் தமிழ்ப் பள்ளி முதல் நிலையிலும் மகா கணேச வித்தியசாலை தமிழ்ப்பள்ளி இரண்டாவது நிலையிலும் கிளேபாங் தமிழ்ப்பள்ளி மூன்றாவது நிலையிலும் வெற்றி பெற்ற வேளையில்...
வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளி ஆகியவை முறையே 4ஆம், 5ஆம் இடத்தினை வென்றன.
பேச்சுப் போட்டியில் ஈவுட் தமிழ்ப்பள்ளி முதல் நிலையிலும் குரோ தமிழ்ப்பள்ளி இரண்டாவது நிலையிலும் செயின்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மூன்றாவது நிலையிலும் வெற்றி பெற்ற வேளையில்...
அப்போட்டியில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தினை முறையே மகிழம்பூ தமிழ்ப்பள்ளியும் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியும் வென்றன.
இப்போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் நெகிரி செம்பிலானில் நடைபெறவிருக்கும் தேசிய நிலையிலான போட்டியில் பங்கேற்பர் என்று பேராக் மாநில தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பழனி சுப்பையா தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களும் சுழல் முறையில் இவ்விழாவை ஏற்று நடத்தி வரும் வேளையில், இவ்வாண்டு கோலகங்சார் மற்றும் உலு பேராக் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் அப்பொறுப்பினை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)