பொது

ஏ.ஆர். ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

21/07/2024 04:31 PM

கோலாலம்பூர், 21 ஜூலை (பெர்னாமா) -- 1992ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி கடந்த 32 ஆண்டுகாலம் உலகெங்கும் உள்ளவர்களை தமது இசையால் கட்டிப்போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். 

வரும் 27ஆம் தேதி அவரின்  பிரமாண்ட இசை நிகழ்ச்சி மீண்டும் மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.

நாட்டில் உள்ள தமது ரசிகர்களை இசையின் மூலம் மகிழ்ச்சிப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான், வரும் சனிக்கிழமை கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் உலகத் தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கின்றார். 

அன்று இசைப்புயலாக உருவெடுத்து இந்திய சினிமாவின் உச்சம் தொட்ட அவர், தமது இசைகுழுவுடன் இணைந்து உலக அளவில் பல்வேறு நாடுகளில் மேடை நிகழச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார். 

ஆண்டுக்கு ஒரு சில இசை நிகழ்ச்சிகளை மட்டுமே படைத்தாலும், இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீதான ஈடுபாடு எப்போதும் குறைந்தபாடில்லை.

இந்த ஆஸ்கார் நாயகன், மலேசியாவைப் பொருத்தவரை இதற்கு முன்னர் சில இசை நிகழ்ச்சிகளைப் படைத்திருந்தாலும் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி, அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இம்முறை அவருடன் சேர்ந்து, பின்னணிப் பாடகர்கள் மனோ, ஶ்ரீநிவாஸ், ஸ்வேதா மோகன் உட்பட பல திரைப்பிரபலங்கள் ரசிகர்களை இசை மழையில் நனைய வைக்க காத்திருக்கின்றனர். 

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் உட்பட மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள, www.starplanet.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)