பொது

நூர் ஃபாரா கொலை; இரண்டு ஆதாரங்கள் கண்டெடுப்பு

22/07/2024 05:25 PM

சிலிம் ரீவர், 22 ஜூலை (பெர்னாமா) --  நூர் ஃபாரா கார்த்தினியின் கொலை வழக்குத் தொடர்பாக இன்று, பேராக், சிலிம் ரீவர், கம்போங் பாத்து 4, சுங்கை த்ரோலாக்கில் ஆதாரங்கள் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில், விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்ட நபர் பணிபுரிந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படும் இரண்டு கார் சாவிகள் உட்பட கருப்பு நிற பணப்பைக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணிக்கு, சுங்கை த்ரோலாக்கில் அரச மலேசிய போலீஸ் படையின் நீர்நிலைத் தடயவியல் விசாரணைப் பிரிவின் ஐந்து முக்குளிப்பாளர்கள், ஐந்து தடயவியல் அதிகாரிகள் உட்பட இரண்டு விசாரணை அதிகாரிகளுடன் தேடல் பணி தொடங்கியது.

ஆற்றின் பாலத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவு வரையில் இன்றைய தேடல் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆற்றின் நீர் மட்டம் தெளிவாகவும், சீராகவும் இருந்த நிலையில் பாலத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் வாகனத்தின் சாவிகள் கண்டெடுக்கப்பட்டன.

பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு முதல் கண்டெடுத்த இடத்திலிருந்து 5 மீட்டர் தொலைவில் கொலை செய்யப்பட்டவரின் பணப்பைக் கிடைத்தது.

இதனிடையே, கண்டெடுக்கப்பட்ட பணப்பையில், நூர் ஃபாராவின் அடையாள அட்டை உட்பட பாஸ்போர்ட்  அளவிலான புகைப்படம் இருப்பதை முக்குளிப்பாளர்கள் பெர்னாமா தொலைக்காட்சி நிருபர்களிடம் உறுதிச் செய்தனர்.

இன்றைய தேடுதல் நடவடிக்கையில் திருப்தி அடைந்த அக்குழுவினர் மதியம் மணி ஒன்று அளவில் தங்களின் தேடல் பணியை நிறைவு செய்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)