பொது

ரவாங், சுங்கை புவாயா நெடுஞ்சாலை அருகே கோர விபத்து - கொள்கலன் லாரி ஓட்டுநர் பலி

30/07/2024 05:15 PM

ரவாங், 30 ஜூலை (பெர்னாமா) --  இன்று காலை மணி 6 அளவில் சிலாங்கூர், ரவாங் அருகே வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 441.2 கிலோ மீட்டரில், மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில் கொள்கலன் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள், காயமடைந்த கார் மற்றும் டிரெய்லர் லாரி ஓட்டுநர்களான இருவரையும் பொதுமக்கள் காப்பாற்றியதாக அதன் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்புத் துறைக்கு காலை மணி 6.02-க்கு அவசர அழைப்பு வந்ததாக அஹ்மாட் முக்லிஸ் கூறினார்.

ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு தீயணைப்பு இயந்திரம் மற்றும் அவசர மருத்துவக் குழு, சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கொள்கலன் லாரி , டிரேலர் மற்றும் PROTON PERSONA ஆகிய மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

கொள்கலன் லாரி ஓட்டுநர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த வேளையில், இதர ஓட்டுநர்கள் சொற்ப காயத்துடன் உயிர் தப்பியதாக உறுதிப்படுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)