பொது

காரை செலுத்திய 12 வயது சிறுவன்; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

31/07/2024 05:19 PM

சிப்பாங், 31 ஜூலை (பெர்னாமா) --  நேற்று முன்தினம் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் இருப்பது போன்று பன்னிரெண்டு வயது சிறுவன் தமது இரு இளைய சகோதரர்களுடன் காரை செலுத்தியது தொடர்பான விசாரணை 2001ஆம் ஆண்டு சிறார் சட்டம்  செக்‌ஷன் 31 உட்பிரிவு (1)-இன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 39 உட்பிரிவு(1)-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டது.

சிலாங்கூர், சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டதாக சிப்பாங் போலீஸ் தலைவர் எசிபி வான் கமாரூல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகளுடன் அச்சிறுவன் புரோடுவா விவா காரை செலுத்துவதைப் பெண் ஒருவர் தடுக்கும் காணொளி ஒன்று திங்கட்கிழமை பரவலாக பகிரப்பட்டது.

அப்பெண் வாகனத்தை நிறுத்தும்படி கட்டளையிடுவதற்கு முன்னதாக, ​​சம்பந்தப்பட்ட கார் ஒரு வீட்டைக் கடந்து செல்லும்போது மிக வேகமாக செலுத்தப்பட்டது அக்காணொளியின் வழி தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட அந்தச் சிறுவன் அப்பகுதியில் பலமுறை காரில் செல்வதைப் பார்த்ததாகவும், இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் அப்பெண் கூறினார்.

அதைத் தொடர்ந்து, வாக்குமூலம் அளிக்க அச்சிறுவனின் ஐம்பத்து மூன்று வயதுடைய தந்தையும், சிப்பாங் போலீஸ் தலைமையக விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவிற்கு வருகை புரிந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)