உலகம்

வயநாடு நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 361-ஆக உயர்வு

04/08/2024 07:34 PM

கேரளா, 04 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 361-ஆக அதிகரித்துள்ளது.

மீட்புப் பணிகள் இன்னும் தொடரப்பட்டு வரும் வேளையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது.

தொடர்ந்து ஆறாவது நாளாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் 250-க்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர், காணாமல் போனவர்களைத் தேடுவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக, மண்ணுக்குள் உயிரோடு இருப்பவர்களைக் கண்டறியக் கூடிய நவீன கருவிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைக் கண்டறியும் பணியில் ராணுவம் மற்றும் காவல் துறையில் உள்ள மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

அதுமட்டுமின்றி ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தியும் தேடல் பணி மேற்கொள்ளப்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாள்களுக்கு மேலாவதால் காணாமல் போனவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் பலியாகியிருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)