பாரிஸ், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி.
ஆண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா தாய்லாந்திடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து பூப்பந்து போட்டியில் தங்கம் வெல்லும் மலேசியாவின் கனவு இறுதியில் ஈடேறாமல் போனது.
இன்று நடைபெற்ற காலிறுதியில் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு முன்னேறிய நாட்டின் ஒற்றையர் ஆட்டக்காரரான லீ சீ ஜியா தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சர்னிடம் தோல்வி கண்டார்.
ஆட்டம் தொடங்கியது முதலே குன்லவுட் விடிட்சர்னிடம் தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி முன்னிலை வகித்து வந்தார்.
லீ சீ ஜியா அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் 26 நிமிடங்கள் நீடித்த முதல் செட்டில் 21-14 என்று புள்ளிகளில் தோல்வி கண்டார்.
இதேநிலை இரண்டாம் செட் ஆட்டத்திலும் நீடித்த வேளையில் 24 நிமிடங்களில் 21-15 என்ற புள்ளிகளில் லீ சீ ஜியா மீண்டும் விடிட்சர்னிடம் வீழ்ந்தார்.
எனினும், நாளை நடைபெறவிருக்கும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் லீ சீ ஜியா உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான விக்டர் அலெக்சனையோ அல்லது இந்தியாவின் லக்ஷா சென்னையோ எதிர்கொள்ளவிருக்கிறார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]