கெந்திங் மலை , 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சனிக்கிழமை கெந்திங் மலையின் 2.6ஆவது கிலோ மீட்டரில் விரைவு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
இதில் 20 பயணிகள் உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் சொற்ப காயங்களுக்கு உள்ளானார்.
கெந்திங் மலையில் இருந்து கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் போது இவ்விபத்து நிகழ்ந்ததாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் சைஹாம் முஹமட் கஹார் தெரிவித்தார்.
பிற்பகல் மணி 1.40 அளவில் பிரேக் செயலிழந்து வலதுபுறம் உள்ள சாலை தடுப்புச்சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, சம்பவத்தை நேரில் பார்த்த தரப்பினர் விசாரணைக்கு உதவ முன் வருமாறு சைஹாம் கேட்டுக் கொண்டார்.
இவ்வழக்கு 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிகள், விதிமுறை 10-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)