பொது

அதிகாலை நடந்த கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

14/08/2024 05:46 PM

போர்ட்டிக்சன், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இன்று அதிகாலை, நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன், கம்போங் கெலாமில் உள்ள சாலை சந்திப்பில், சமிக்ஞை விளக்குகளுக்கான மின்கம்பிகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மண்வாரி இயந்திரத்தை கார் ஒன்று மோதியதில் அதில் பயணித்த இருவர் மரணமடைந்தனர்.

மேலும் நால்வர் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.

நேற்று பின்னிரவு மணி 1.45 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், அக்காரை ஓட்டிய 24 வயது ஆடவரும் உடன் பயணித்த கல்லூரி மாணவியான 18 வயதான பெண்ணும், சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தனர்.

அக்காரில் பயணித்த 16-இல் இருந்து 19 வயதிற்குட்பட்ட நால்வர் சொற்ப காயங்களுக்கு ஆளான நிலையில், மண்வாரி இயந்திர ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டெண்டன் ஐடி ஷாம் முஹ்மட் தெரிவித்தார்.

போர்ட்டிக்சனில் இருந்து சிரம்பான் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அக்கார் சம்பவ இடத்தில் இருந்த சாலை கூம்பை தவிர்க்க முயற்சித்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் விவரித்தார்.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41(1)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்தவர்கள் போர்ட்டிக்சன் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையை 06-6472222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502