பொது

மனைவி, மகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அந்நிய நாட்டவர் கைது

20/08/2024 03:39 PM

அலோர் ஸ்டார், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தமது மனைவி மற்றும் மகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று, கெடா, அலோர் ஸ்டார், பெக்கான் சிம்பாங் கோலா அருகே கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றின் பின்புறத்தில் உள்ள கால்வாயில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஒரு பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று மாலை மணி 5.04-க்கு தமது தரப்பிற்கு தகவல் கிடைத்ததாக அலோர் ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சித்தி நோர் சலாவாத்தி ச-ஆட் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் 34 மற்றும் பத்து வயதுடையவர்கள் என்றும் அவர்கள் முழுமையான ஆடை அணிந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏ.சி.பி சித்தி நோர் சலாவாத்தி கூறினார்.

அவர்களின் அடையாள ஆவணமும் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்நிய நாட்டவர் என்று நம்பப்படும் அவ்விருவரின் கழுத்துப் பகுதியிலும் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அவர்களின் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், நேற்றிரவு மணி ஒன்பதுக்கு கைதான 34 வயதுடைய அவ்வாடவர், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு இன்று தொடங்கி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]