புத்ராஜெயா, 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கோலாலம்பூரின் பண்டார் மென்ஞாலாரா, ஜலான் துவாங்கு, ஜாலன் தியோங் நாம் மற்றும் ஜாலான் செராஸ் ஆகிய நான்கு பகுதிகளில் சட்டவிரோதமாக முகவர் சேவையை வழங்கி வந்த மோசடி கும்பல் ஒன்றை மலேசிய குடிநுழைவுத் துறை JIM வியாழக்கிழமை முறியடித்தது.
இதன் வழி, 33-இல் இருந்து 53 வயதிற்குட்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட வேளையில் பல்வேறு நாடுகளின் 530 கடப்பிதழ்களும் கைப்பற்றப்பட்டதாக JIM-இன் துணைத் தலைமை இயக்குநர் ஜஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 13 பேரில், 11 பேர் வங்காளதேச ஆடவர்களாவர்.
மேலும், இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும் அந்நிறுவனத்திற்கு உரிமையாளர் என்று நம்பப்படும் மலேசியப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ஜஃப்ரி கூறினார்.
வங்காளதேச ஆடவர்கள் மூவரும் இந்திய ஆடவர் ஒருவரும் இன்னும் பயன்படுத்தக் கூடிய ஆவணங்களைக் கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே வங்காளதேசத்தின் மேலும் இரு ஆடவர்கள் அனுமதிக்கப்பட்ட காலக்கட்டத்தைக் காட்டிலும் கூடுதல் நாள்கள் தங்கியிருந்ததும், எஞ்சியவர்களிடம் முறையான ஆவணங்களோ அல்லது கடப்பிதழ்களோ இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)