பொது

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட சரஸ்வதி பூஜை

11/10/2024 08:07 PM

பத்து மலை, 11 அக்டோபர் (பெர்னாமா) --   கல்விக்கு அதிபதியான கலைமகளை வணங்கி மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி சிலாங்கூர் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியிலும் சரஸ்வதி பூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளியின் சமயப் பிரிவின் பொறுப்பாளர் ஆசிரியர் இந்திரா ஜெகநாதன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையுடன் இவ்விழா நடந்தேறியது.

காலையில் தொடங்கப்பட்ட இவ்விழாவில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆசிரியர்கள் சீர் தட்டுகளை ஏந்தியவாறு பத்துமலை அடிவாரத்தில் குடிக்கொண்டிருக்கும் பிள்ளையார் சன்னதியில் சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர்.

பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் தலைமை குருக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மாணவர்கள், தேவாரம் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடி தங்களின் பக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.

அன்னதானத்துடன் நிறைவுப் பெற்ற இவ்விழாவிற்குப் பின்னர், மாணவர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலை வழக்கம் போல் தொடர்ந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)