பொது

இந்திய கூட்டுறவுக் கழகங்களின் எதிர்கால இலக்குகளைத் திட்டமிடும் மாநாடு

11/10/2024 08:05 PM

பிரிக்பீல்ட்ஸ், 11 அக்டோபர் (பெர்னாமா) --   இந்திய கூட்டுறவுக் கழகங்களில் உள்ள சவால்களைக் கண்டறிந்து, அதன் எதிர்கால இலக்குகளைத் திட்டமிடும் நோக்கில் இம்மாதம் அக்டோபர் 13-ஆம் தேதி மாநாடு ஒன்றை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை, ஸ்பூமி கோஸ் பிக், பெண் மற்றும் ஃபிரிவ்-ஐ போன்ற கடனுதவி மற்றும் உதவித் தொகை திட்டங்களின் மூலம் இந்திய தொழில்முனைவோர்கள் பயனடைந்திருக்கும் நிலையில் இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கு என்று இம்மாநாடு பிரத்தியேகமாக நடத்தப்படவுள்ளது.

நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதில் 419-க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் இந்தியர்களுக்குச் சொந்தமானது.

எனினும், அதில் 200-க்கு மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கும் எஞ்சிய கழகங்களுக்கும் முறையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் இம்மாநாடு அமையவிருப்பதாக, துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனின் மூத்த அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் கூறினார்.

''அவர்களின் கருத்துகளை. அதனால்தான் கலந்துரையாடல் நிகழ்ச்சி நாம் வைக்கின்றோம். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் வாயிலாக அவர்களுக்கும் மன ஆதகங்கள் இருக்கும். என்ன மாதிரியான மன ஆதங்கம், என்ன பிரச்சனை அதை நேரடியாக பகிர்ந்து கொண்டால் நிச்சயமாக அந்த கூட்டுறவு மாநாட்டின் வாயிலாக பல்வேறு விஷயங்களுக்கு முறையாக நல்ல முறையில் தீர்வுக் காண முடியும்'', என்று அவர் கூறினார்.

மேலும், இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கு ஒரு நற்செய்தியை அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவிப்பு செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் காலை சுமார் 9 மணிக்கு தொடங்கவிருக்கும் இம்மாநாட்டில் பல்வேறு கூட்டுறவுக் கழகங்களிலிருந்து 800-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவிருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)