கோலாலம்பூர், 21 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில் தற்போது அரிசியின் கையிருப்பு 5 மாதங்களுக்கு மேல் போதுமானதாகவுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
மேலும், போதுமான உணவுப் பொருட்கள் குறிப்பாக அரிசி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் இருப்பை உறுதி செய்வதற்கான குறுகிய, நீண்ட காலத் திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத் துறை அமைச்சு தீவிரமாகச் செயல்படுத்தி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில் அவசரநிலை உட்பட பிற உற்பத்தி செய்யும் நாடுகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் அரிசியின் கையிருப்பு 11 லட்சம் மெட்ரிக் டன்கள் உள்ளன. இவை 5 அல்லது 6 மாதங்களுக்குப் போதுமானது.
அரிசி விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாட்டின் உணவு கையிருப்பை உறுதி செய்வதற்கான அமைச்சகத்தின் உடனடித் திட்டம் குறித்துக் கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்துல் ஹுசீர் அயோப் கேட்ட கேள்விக்கு மாட் சாபு அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)