பொது

பேரங்காடியின் நுழைவாயிலில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

26/10/2024 06:25 PM

ஈப்போ, 26 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று கிளேபாங்கில் உள்ள பேரங்காடியின் நுழைவாயிலின் முன்புறம் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாலை மணி 6.13 அளவில் 64 வயதான அம்முதியவரின் சடலம் குறித்து பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

அம்முதியவர் உடலில் காயங்கள் ஏதும் இன்றி தரையில் கிடந்ததாக சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி அபாங் சைனால் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் பொருட்டு 24 வயதான உள்நாட்டு பெண் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அந்நபரை இன்று முதல் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பெண் மீது குற்றவியல் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.

இச்சம்பவத்திற்கான காரணத்தையும் இதர சந்தேக நபர்களையும் அடையாளம் காண குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)