ஜொகூர் பாரு, 12 ஜூலை (பெர்னாமா) - ஜோகூர் பாரு, தாமான் பண்டானில் உள்ள ஜாலான் வாஜா 5-இல் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறை மற்றும் மூன்று கார்கள் உட்பட எட்டு கடைகள் எரிந்து சாம்பலாகின.
சம்பவம் குறித்து மாலை மணி 5.10-க்கு கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து தெப்ராவ், ஜோகூர் ஜெயா, கெம்பாஸ், லார்க்கின் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜோகூர் மாநிலத்திற்கான மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்களைத் தவிர்த்து மௌன்ட் ஆஸ்டின் மற்றும் உலு திராம் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த படையினரும் தீயை அணைப்பதற்கு துணைப் புரிந்ததாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அப்பேச்சாளர் கூறியிருந்தார்.
இச்சம்பவத்தில் தீப்பற்றிய அனைத்து கடைகளும் 50 முதல் 90 விழுக்காட்டு வரையில் சேதமுற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு புரோட்டோன் வீரா மற்றும் இரண்டு புரோட்டோன் சாகா ரக வாகனங்களும் இதில் சேதமுற்றன.
இருப்பினும், இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)