கோலாலம்பூர், மார்ச் 25 (பெர்னாமா) -- கட்சி நிர்வாகத்தினரும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் ம.இ.கா தொடர்ந்து தேசிய முன்னணியில் நிலைத்திருக்க முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான முதல் மத்திய செயலவைக் கூட்டத்தில், அனைவரும் இம்முடிவை ஆதரித்துள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
ம.இ.கா-வின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றிய பிரதமர்களில் டான் ஶ்ரீ முகிடின் யாசினும் குறிப்பிடத்தக்கவர்.
அதனால்தான் அவர் பெரிக்காத்தான் நேஷனலில் தலைவராக இருந்த போது அக்கூட்டணியில் இணையலாம் என்று ம.இ.கா எண்ணம் கொண்டிருந்தது.
ஆனால், தற்போது அக்கூட்டணியே பிளவுபட்டிருக்கும் நிலையில், உறுப்பினர்களின் நலன் காக்க ம.இ.கா தொடர்ந்து தேசிய முன்னணியையே ஆதரிக்கும் என்று அவர் விவரித்தார்.
"தற்போது பெரிக்காத்தான் நேஷனலில் பாஸ் தலைமைத்துவம் வகித்து வருகிறது. எனவே இந்தியர்கள் சார்ந்திருக்கும் கட்சியான ம.இ.கா பாஸ் தலைமைத்துவத்தின் கீழ் இணையும் வேளையில் இந்தியர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி உறுப்பினர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலமாக இந்தியர்களின் ஆதரவு ம.இ.காவிற்கு முழுமையாக கிடைக்குமா என்பதை ஆராய்ந்து பார்த்து இறுதியில் தேசிய முன்னணியிலே ம.இ.கா நிலைத்திருக்க முடிவெடுத்திருக்கிறது," என்றார் அவர்.
இக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், உதவித் தலைவர்கள் என்று உயர்மட்டப் பொறுப்பாளர்களும் மத்திய செயற்குழுவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)