கோத்தா பாரு, 07 ஏப்ரல் (பெர்னாமா) -- கிளந்தான் கோத்தா பாருவில், தமது காரில் கெத்தும் (KETUM) இலைகளை எடுத்துச் சென்ற நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஈடாக, சுமார் 12,000 ரிங்கிட் கையூட்டு கோரியதாகவும், பெற்றதாகவும் சந்தேகிக்கப்படும் போலீஸ் அதிகாரிகள் நால்வர் ஐந்து நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்து, கிளந்தானில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் அவர்கள் அனைவரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தடுத்து வைக்க நீதிபதி ராயிஸ் இம்ரான் ஹமிட் உத்தரவிட்டார்.
20 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த நான்கு ஆடவர்களும், நேற்று காலை மணி 9 முதல் பிற்பகல் மணி 1-க்குள் தத்தம் அலுவலகங்களில் கைது செய்யப்பட்டனர்.
2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இக்குற்றச்செயலுக்கு அனைத்து சந்தேக நபர்களும் உடந்தையாக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
நான்கு சந்தேக நபர்களும், மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமான தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததன் மூலம் கையூட்டுப் பணத்தைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)