பாங்கி, ஏப்ரல் 27 (பெர்னாமா) -- மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடுவதா அல்லது தற்போதுள்ள கூட்டணியைத் தொடர்வதா என்பது குறித்து கேள்வி நீடிக்கிறது.
இந்நிலையில், இது குறித்து தேசிய முன்னணி எப்போது முடிவெடுக்கும் என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அது கட்சி ரகசியம் என்று அவர் அதன் தொடர்பில் விவரிக்க மறுத்துவிட்டார்.
"அது, அது கட்சி ரகசியம்," என்றார் அவர்.
மேலும், 'Rumah Bangsa' திட்டத்தின் மூலம் தேசிய முன்னணியில் மீண்டும் இணையவிருக்கும் புதிய பெயர்கள் குறித்தும் அவரிடம் வினவப்பட்டது.
"அது நேரம் வரும்போது நாங்கள் அறிவிப்போம்," என்று அவர் குறிப்பிட்டார்.
'Rumah Bangsa' என்பது முன்னாள் உறுப்பினர்களின் மீண்டும் இணைவதற்கு மட்டும் அல்ல, மாறாக புதிய உறுப்பினர்கள், குறிப்பாக இளைஞர்களின் நுழைவை எளிதாக்குவதிலும் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அல்லது உறுப்பினர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி கட்சிக்குத் திரும்புவதற்கு அம்னோ தனது வாய்ப்பு வழங்குவதாக முன்னதாக அதன் தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)