Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இனம், மதம் எல்லைகளைத் தாண்டிய மனிதநேயம்: துணையமைச்சர் பாராட்டு

28/04/2026 02:32 PM

புத்ரா ஜெயா, ஏப்ரல் 28 (பெர்னாமா) -- சமூகப் பின்னணியைப் பார்க்காமல் மனிதநேயத்துடன் உதவி செய்த முஹம்மட் யூசோப் முஹம்மட் நூர் மற்றும் டிக்கி ஆகியோரின் செயலைத் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் பாராட்டினார். 

மோட்டார் சைக்கிள் பழுதாகி சாலையில் சிக்கியிருந்த டிக்கிக்கு யூசோப் உதவி செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரலாகப் பகிரப்பட்டதைக் குறிப்பிட்டு, அஃது உண்மையான ஒருமைப்பாட்டின் எடுத்துக்காட்டாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இனம், மதம் மற்றும் சமூக நிலை எல்லைகளைத் தாண்டிய மனிதநேயத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துவதாக அவர் புகழாரம் சூட்டினார்.

யூசோப் மற்றும் டிக்கி காட்டிய செயல் நம் நாட்டைப் பிரதிபலிக்கின்றது. மரியாதை, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட நாடு என்பதற்கான சான்றாக அவர்களின் செயல் அமைந்தது என்று அவர் கூறினார்.

மேலும், சாதாரண நபர்கள் சமூக நலனுக்காக மேற்கொள்ளும் அசாதாரண செயல்களுக்குப் பாராட்டாக ‘மடானி ஒருமைப்பாட்டு நண்பர்’ என்ற நற்சான்றிதழ்களைத் துணையமைச்சர் வழங்கி அவர்களைக் கௌரவித்தார். 

“யூசோப் மனப்பூர்வமாக உதவி செய்தார்; டிக்கி அந்த மனிதநேயக் கதையின் ஒரு பகுதியாக இருந்து, சமூகத்தில் இன்னும் நல்லிணக்கம் உயிரோடு இருப்பதை நினைவூட்டினார்.

அவர்கள் இருவரும் சிறிய மனிதநேய செயல்கள் கூட பெரிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதை காட்டும் முன்னுதாரணங்கள் என்று யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.  

மேலும், இச்சம்பவம் மக்களிடையே உதவும் மனப்பான்மையை வளர்க்கவும் பல்வேறு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை பேணவும் ஊக்கமளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மலேசியா மடானி கொள்கையின் கீழ், மக்களை ஒன்றிணைக்கும் ஒவ்வொரு நல்ல செயலையும் பாராட்டி அதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)