பங்கோர் தீவு, 14 மே (பெர்னாமா) -- இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடந்த திங்கட்கிழமை பங்கோர் தீவு கடல் பகுதியில் மூழ்கிய நிலையில், அப்படகில் பயணித்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.
காலை மணி 11.30க்கு பாதிக்கப்பட்டவரின் சடலம் மிதந்த நிலையில் தேடல் மற்றும் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது.
அடையாளம் காண்பதற்கும் பிரேதப் பரிசோதனைக்கும் அந்த சடலம் ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மண்டலம் ஒன்றின் கடல்சார் போலீஸ் படையின் செயல்பாட்டுத் தலைமையகக் கட்டளை அதிகாரி டி.எஸ்.பி மஸ்ரி செ மஹமூட் தெரிவித்தார்.
இதன் வழி, இச்சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
பாங்கோர் தீவு கடற்பரப்பில் கள்ளக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கிய சம்பவத்தில் உயிரிழந்த, மீதமுள்ள அறுவரைத் தேடி மீட்கும் பணி, இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது.
37 இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் அப்படகு, மலேசியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணித்த வேளையில், பங்கோர் தீவின் கடற்பரப்பில் மூழ்கியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)