ஜோகூர் பாரு, ஜூன் 1 (பெர்னாமா) -- மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் ஜோகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது.
தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில், மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி இதனை அறிவித்தார்.
இன்று ஜோகூர் இடைக்கால சுல்தான், சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தீர்மானத்திற்கு உட்பட்டு, ஜனநாயக செயல்முறைக்கு வழிவிடும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஜோகூர் மக்களுக்கு ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விவரித்தார்.
இது தொடர்பாக, ஜோகூர் மக்களின் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த ஜனநாயக செயல்முறையை முழு மரியாதையுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று Onn Hafiz கேட்டுக் கொண்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், 56 தொகுதிகளில் 40 தொகுதிகளைத் தேசிய முன்னணியின் அம்னோவும், 12 தொகுதிகளை நம்பிக்கை கூட்டணியும் வென்றது.
மூன்று தொகுதிகளில் பெரிகாத்தான் நேஷனலும், ஒரு தொகுதியை முடா கட்சியும் வென்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)