மாட்ரிட், 04 ஜூன் (பெர்னாமா) -- காற்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சி, 2026-ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத் துறையின் Princess of Asturias விருதைப் பெறுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமது காற்பந்து வாழ்க்கையில், ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் மெஸ்சி அர்ஜெண்டினாவுக்காக விளையாடுவதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
38 வயதான லியோனல் மெஸ்சியின் அசாதாரணத் திறமை, சிறந்த தொழில் பயணம், வசதி குறைந்த குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க அவர் செய்துவரும் தொண்டு முயற்சிகளையும் இணைத்தே இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
டென்னிஸ் உலகின் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸைத் தொடர்ந்து, இந்த கௌரவத்தைப் பெறும் அண்மைய விளையாட்டு வீரராக மெஸ்சி திகழ்கிறார்.
1987-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல், Carolina Marín, Sebastian Coe, நியூசிலாந்து தேசிய ரக்பி அணி மற்றும் ஸ்பெயின் காற்பந்து அணி போன்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களுக்கும் அணிகளுக்கும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஆடுகளத்தில் மெஸ்சியின் முன்மாதிரியான அணுகுமுறை, அவரது விடாமுயற்சி, பணிவு மற்றும் குழு விளையாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அவர் பலராலும் மதிக்கப்பட்டு போற்றப்பட்டதாக நடுவர் குழுவின் அறிக்கை தெரிவித்தது.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)