சிபிதாங், 13 ஜூன் (பெர்னாமா) -- உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் நிச்சயமற்றத்தன்மையை உலகம் எதிர்கொண்டிருந்தாலும், நல்ல அனைத்துலக உறவுகளும் அரசியல் நிலைத்தன்மையும், மலேசியா தனது எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தொடர்ந்து பெற உதவுகின்றன.
விவேகமான அரசத் தந்திரக் கொள்கைகள், ரஷ்யா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற வெளிநாடுகள் மலேசியாவை மிக நெருங்கிய நண்பராகக் கருதுவதற்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அண்மையில் துர்க்மெனிஸ்தானுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், உலகின் மிகப்பெரிய எரிவாயுக் கிணறுகளில் ஒன்றை மலேசியாவுடன் பெட்ரோனாஸ் மூலம் செயல்படுத்த அந்நாட்டின் தலைவர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.
''அமெரிக்கா மற்றும் சீனா உட்பட அனைவருடனும் நமது நாடு நட்புறவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், சீனர்கள், இந்தியர்கள், கடசான்கள் மற்றும் இபான்களுக்கு இடையே அமைதியின்மையோ சண்டையோ இன்றி, நாட்டில் அரசியல் சூழல் நிலையாக உள்ளது. அங்கு எந்த விதமான குழப்பமோ சண்டையோ இல்லை,'' என்றார் அவர்.
சபா சௌதர்ன் மடானி லின்க் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆற்றிய உரையின்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)