சுங்கை பட்டாணி, 16 ஜூன் (பெர்னாமா) -- பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து சில சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் மணி 12.30 அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக கோலா முடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
''உயிரிழந்த இருவரும் கன ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள். இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை அறிக்கை திறக்கப்படும். மேலும், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ள அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் பெறப்படும். அப்போது அங்கிருந்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படும்,'' என்றார் அவர்.
சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையின் தடயவியல் துறையில் காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் ஹன்யான் அத்தகவல்களை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் உடலின் மேற்பகுதியிலேயே பெரும்பாலான காயங்கள் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)