பொது

மென்மையான மனதால் ஜோகூர் மக்களை தன்வசம் ஈர்த்துள்ளார் மாமன்னர்

12/07/2024 07:38 PM

ஜோகூர் பாரு, 12 ஜூலை (பெர்னாமா) -- இறுக்கமான முகத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் அதேவேளையில், கடமையை நிறைவேற்றுவதிலும் நிலையான உறுதிப்பாடு அவரிடம் நிறைவாகவே காணப்படுகிறது.

மேலும், மென்மையான உள்ளத்தினால் தான், ஜோகூர் மக்களால் மதிக்கப்பட்டு, நேசிக்கப்படும் தலைவராக 17-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் திகழ்ந்து வருகிறார்.

மற்றவருக்கு எப்போதும் அறிவுரைக் கூறும் அவர், யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் அறிவுரைகளை கண்டிப்புத் தன்மையோடு கூறுவார் என்று மாமன்னரின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் டத்தோ ஆர்.சுகுமாரன் தெரிவித்தார்.

சுல்தான் இப்ராஹிமின் அரியணை அமரும் விழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 19-ஆம் தேதி,  பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவிருக்கும் 'Di Sebalik Mahkota' சிறப்பு நேர்காணலில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

வறுமையிலும் கஷ்டத்திலும் இருக்கும் மக்களைப் பார்த்தால் மனமுருகி, அவர்கள் வாழ்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் அவரின் அக்கறையுள்ள மனமும் மென்மையான இதயமும் வெளிப்படும் என்று சுகுமாரன் புகழாரம் சூட்டினார்.

எனவே, மக்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதில் அவரது மாட்சிமையின் ஆளுமை குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)