பொது

தேசிய தினக் கொண்டாட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஃபஹ்மி நன்றி 

03/09/2024 05:42 PM

கோலாலம்பூர் 03 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காண வந்த சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

அதேவேளையில், நாட்டின் பிரதான நிகழ்ச்சியான அதனை வீட்டிலிருந்தவாறு நேரலையாக பார்த்த அனைத்து தரப்பினரையும் நன்றி பாராட்டுவதாக, ஃபஹ்மி  தமது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், இக்கொண்டாட்டம் எவ்வித தங்கு தடையுமின்றி இனிதே நடைபெறுவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வகையில் ஒத்துழைப்பு நல்கிய அனைவரும் தமது நன்றியையும் பாராட்டினையும் பதிவு செய்து கொள்வதாகவும்,
2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டக் குழுவின் தலைவருமான அவர்I  கூறினார். 

அதே பதிவில், 67-ஆவது தேசிய தின கொண்டாட்டத்தின் உற்சாகத்தை உணர்த்தும், சுமார் ஒரு நிமிட அளவிலான காணொளியையும் அவர் பகிர்ந்திருந்தார்.

JIWA MERDEKA  என்ற கருபொருளில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில்,  17,262 பங்கேற்பாளர்கள், 57 குழுக்கள், 22 இசைக்குழுக்கள், 343 தரைமார்க்க வாகனங்கள், 37 வான் சாதனங்கள், 112 சேவையாற்றும் விலங்குகள் ஆகியவற்றின் அணிவகுப்புகள் களை கட்டியது.

மாமன்னர் தம்பதியரின் தலைமையில் இக்கொண்டாட்டம் நடைபெற்ற வேளையில்,
நாட்டின் 17-வது மாமன்னராக பதவியேற்றப் பிறகு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும், பேரரசியார் ராஜா சாரித் சோஃப்பியாவும் கலந்து கொண்ட முதல் தேசிய தினக் கொண்டாட்டமும் இதுவாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)