வாஷிங்டன், 16 பிப்ரவரி (பெர்னாமா) -- அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள இந்துகள் தைப்பூசத் திருநாளை நேற்று விமரிசையாகக் கொண்டாடினர்.
வாஷிங்டனில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் மூன்று நாள்களாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள இந்துக்களை ஒன்றிணைக்கும் விழாக்களில் இந்த தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.
42 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம், ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆலயத் தரப்பினர் குறிப்பிட்டனர்.
''இந்தக் கோவில் இன்னும் சிறந்த முறையில் மேம்பாடு கண்டு, மக்களுக்கு பலனளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்,'' என்று ஆலயத்தின் தோற்றுநர் குருசாமி தெரிவித்தார்.
''இந்த கோவில்ல நடைபெறும் முக்கியமான விழாக்களில் இதுவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் கூட்டம் அதிகமாக வருகின்றனர்,'' என்று ஆலயத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் கூறினார்.
''இந்தக் கோவில் ஆரம்பிக்கும்போது மலேசியர்கள் அனைவரும் சமைத்து வந்து மக்களுக்கு பரிமாறுவார்கள். ஆனால், தற்போது கோவிலில் உணவுக்கான இடம் உள்ளது. வாஷிங்டனில் வாழை இலையில் உணவு பரிமாறுவது இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 1,500 பேருக்கு வாழை இலை உணவு வழங்கப்படுகிறது,'' என்று ஆலயத் துணை தலைவர் கணேஷ்வரன் நாதன் குறிப்பிட்டார்.
''மலேசியர்கள் இந்த திருவிழாவை ஏற்று நடத்தத் தொடங்கியது முதல் பத்துமலையின் அம்சங்களை இதில் இணைக்கப் பார்க்கிறோம். இலங்கை மக்களின் நல்லூர் திருவிழா என்று விழா நடக்கும். அதற்கும் பத்துமலை முருகன் வடிவம் கொண்ட பதாதைகளைப் பயன்படுத்துவோம்,'' என்று தைப்பூச ஏற்பாட்டுக் குழு தலைவர் ஶ்ரீதரன் குப்புசாமி தெரிவித்தார்.
இதனிடையே, இந்தத் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வது மனதிற்கு திருப்தி அளிப்பதாக பக்தர்கள் சிலர் தெரிவித்தனர்.
''முதலில் யாகம் நடைபெறும். பின்னர் பால் குடம், காவடி எடுப்பார்கள். அதோடு, சங்காபிஷேகம் நடைபெறும். மேலும், அபிஷேகமும், திருக்கல்யாணம் ஆகியவையும் நடைபெறும்,'' என்று தன்னார்வலரான கோவிந்தராஜன் குறிப்பிட்டார்.
''பனிக்காலம் என்பதால், இங்கு வாழை இலை கிடைக்காது. அதனால், வாழை இலை உணவு வழங்க நாங்கள் ஃபுளோரிடா அல்லது சென்னையில் இருந்து இறக்குமதி செய்வோம்,'' என்று கடந்த 15 ஆண்டுகளாக அன்னதானம் ஏற்பாடு செய்து வரும் பாலன் திலகவள்ளி தம்பதியர் தெரிவித்தனர்.
தொடக்கத்தில் 10 அல்லது 20 பேர் மட்டுமே தைப்பூசத்தில் கலந்து கொண்ட வேளையில், தற்போது ஆயிரத்தில் இருந்து 1,500 பேர் வரை கலந்து கொள்கின்றனர்.
33 ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவில், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வட கரோலினா, கனடா, பிலாடெல்பியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்கின்றனர்.
இத்திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் வெகு தூரத்தில் இருந்து வருகைப் புரிவதைக் கருத்தில் கொண்டு பொது விடுமுறை என்பதால் நேற்று இத்திருநாள் கொண்டாடப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)