கோலாலம்பூர், 16 ஏப்ரல் (பெர்னாமா) -- சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோவின் கீழ் பயணிகள் திட்டம் மற்றும் மகப்பேறு விடுப்பு உதவித்தொகையை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, அதன் சட்ட அம்சங்களை மனிதவள அமைச்சு இறுதி செய்து வருகிறது.
இரு முன்னெடுப்புகளும் சீராகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அவற்றுக்கான வழிமுறைகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக, அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
''சட்டம் மற்றும் சட்டமியற்றல் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம். அதன்பிறகு நாங்கள் ஓர் அறிவிப்பை வெளியிடுவோம். ஆனால், பிரசவிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களும், சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் நான்கு லட்சம் பயணிகளும், பயணிகளுக்கான திட்டத்தின் கீழ், விரைவில் பயன்பெறுவர் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,'' என்றார் அவர்.
இது தொடர்பில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூடியவிரைவில் அறிவிப்பார் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
இன்று, விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற Concorde கிளப் உடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]