குவாந்தான், 20 ஜூன் (பெர்னாமா) -- நேற்று, ஜோகூர், பெக்கான் அருகே ஜாலான் குவாந்தான் - செகாமாட்டின் 67-வது கிலோமீட்டரில் மூன்று வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில் மருத்துவர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்த வேளையில் அறுவர் காயமடைந்தனர்.
நேற்று மாலை மணி ஆறு அளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், இரு வாகனங்களின் ஓட்டுநர்களான, செகாமாட் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் முஹமட் செக்ரி சுஹைரி முஹமட் அத்தானும் சைபர்ஜெயா கிளை உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என்-இன் மூத்த அதிகாரி அசாஹருடின் முஹமட் அலியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
டாக்டர் முஹமட் செக்ரி சுஹைரியின் இரண்டு வயது குழந்தையான டியா சோஃபியா, சினி சுகாதார சிகிச்சையகத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது உயிரிழந்ததாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் முஹமட் சைடி மாட் சேன் தெரிவித்தார்.
அவ்விரு கார்களும் Segamat-இல் இருந்து குவாந்தான் நோக்கி பயணித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
குவாந்தனில் இருந்து முவாட்சாம் ஷா நோக்கிச் சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் ஒன்று, லாரியை ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் நுழைந்து, அவ்விரு வாகனங்களையும் மோதியதாக நம்பப்படுவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமட் சைடி குறிப்பிட்டிருந்தார்.
டாக்டர் முஹமட் செக்ரி சுஹைரியின் மனைவி மற்றும் அவரின் பெற்றோரும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில், பிக்கப் வாகன ஓட்டுநரான 31 வயதுடைய அசாருடின், அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கும் காயங்கள் ஏற்பட்டன.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 1(1)-இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]