பொது

8 மாதக் குழந்தை மரணம்; பராமரிப்பாளர் கைது

07/09/2024 07:24 PM

மலாக்கா, 07 செப்டம்பர் (பெர்னாமா) -- நேற்று, மலாக்கா, அலோர் காஜா, தாமான் கெலெமெக் உத்தாமாவில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றில் எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த விவகாரம் தொடர்பில் அதன் பெண் பணியாளர் ஒருவர் இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் தரப்பு செய்த தடுப்புக் காவல் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மஜிஸ்திரேட் நோர் ஷலியத்தி முஹமட் சொப்ரி இன்று, ஆயர் குரோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் போலீஸ் தரப்பு விசாரணையை மேற்கொள்ளும் வகையில் அடுத்த வெள்ளிக்கிழமை வரையிலான தடுப்புக் காவல் உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

நேற்று மாலை மணி 3.30-க்கு அக்குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 34 வயதுடைய அந்தப் பெண்ணை போலீஸ் கைது செய்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

நேற்று காலை மணி 7.05 அளவில் அக்குழந்தையின் தாயாரும் தாத்தாவும் அதனை அந்தப் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

அதன் பின்னர், அக்குழந்தையின் உடல் நீல நிறமானதாகவும் அதன் மூக்கிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியதாகவும் அம்மையத்திலிருந்து கிடைந்த அழைப்பி வழி தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை உயிரிழந்ததை மருத்துவர் உறுதிபடுத்தியப் பின்னர் மாலை மணி ஆறு அளவில் பிரேதப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]