பொது

2 கோடி அதிகம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது

09/10/2024 05:54 PM

கோலாலம்பூர், 09 அக்டோபர் (பெர்னாமா) -- அக்டோபர் 5 முதல் 7-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில், 2 கோடியே 40 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டன.

அதன்வழி, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூரில் செயல்பட்டு வந்த மூன்று போதைப்பொருள் விநியோக கும்பல்களை, அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம் முறியடித்தது.

முதலாவது நடவடிக்கையின்போது, தமது தரப்பு கோலாலம்பூரிலும் ஜோகூரிலும், ஐந்து சோதனைகளை மேற்கொண்டதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ காவ் கொக் சின் கூறினார்.

அச்சோதனையில், அக்கும்பல் தலைவர், ஐந்து உள்நாட்டு ஆடவர்கள் மற்றும் இரண்டு தாய்லாந்து பெண்கள் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர்.

50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 111.96 கிலோகிராம் ஸ்யபு மற்றும் 19.49 கிலோ கேத்தாமின் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டாவது சோதனையில், கெப்போங் இண்டஸ்திரியல் பார்க்கில், உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

"வாகனங்கள் மற்றும் வளாகங்களைப் பரிசோதனை செய்ததில்,358 கிலோ எடையுள்ள மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் 'Red Apple' என்று எழுதப்பட்ட 350 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் மதிப்பு சுமார் 82 லட்சம் ரிங்கிட்டாக இருக்கலாம்..." என்றார் அவர். 

மூன்றாவது நடவடிக்கையில், பண்டார் மஞ்சாலாராவில் மூன்று தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டதோடு, 81 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)