பொது

அடுக்குமாடி குடியிருப்பில் தீ; ஒருவர் பலி

12/10/2024 06:22 PM

பெட்டாலிங் ஜெயா, 12 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று காலை பெட்டாலிங் ஜெயா, பால்ம் ஸ்ப்ரிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயதான பெண் ஒருவர் பலியாகியிருக்கின்றார்.

இச்சம்பவத்தில், இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக காலை 8.39 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, டாமான்சார தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் BBP, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுங்கை பூலோ BBP-யின் மொத்தம் 21 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM-மின் சிலாங்கூர் நடவடிக்கை பிரிவு அதிகாரி ஹஸ்னோல் ஹடி முஹமட் ரோஸ்லான் தெரிவித்தார்.

15 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 14-ஆவது மாடியில் உள்ள மின்சார விசை பலகையில் தீ பிடித்ததாக நம்பப்படுகிறது.

தீயிலிருந்து வெளியேறிய புகையை சுவாசித்தன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்பெண்மணி மரணம் அடைந்ததை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்ட 29 வயதான ஆடவரும் 24 வயதான பெண்ணும் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)