பொது

PISAU TENTERA DARAT விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டார் தமராஜ்

02/02/2025 05:37 PM

போர்ட் டிக்சன், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- அனைத்துலக அளவில் நடைபெற்ற சீலாட் போட்டியில் வெற்றியாளராகி மலேசியா மற்றும் மலேசிய தரைப் படை, தி.டி.எம்-இன் பெயர்களை உலக அரங்கில் பெருமைப்படுத்திய சார்ஜன் தமராஜ் வாசுதேவனுக்கு PISAU TENTERA DARAT எனும் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர், ஐக்கிய அரபு சிற்றரசு, அபு தாபியில் நடைபெற்ற 20-வது உலக சீலாட் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும், அரச மலேசிய இராணுவப் போலீஸ் படையில் பணிபுரியும் 29 வயதான தமராஜ் பெற்றுத் தந்தார்.

இந்த விருது தமது உழைப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் கிடைத்த மாபெறும் அங்கீகாரம் என்று பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவு தொடர்புகொண்டபோது தமராஜ் கூறினார்.

நேற்று, நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் நடைபெற்ற அவ்விழாவில், ஆடவர் ஒற்றை படைப்பிரிவு சீலாட் போட்டியில் தங்கம் வென்ற 33 வயதான சார்ஜன் அஹ்மாட் ஃபௌசான் அப்துல் ஹடிக்கும், கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி, சிலாங்கூர், புஞ்சாக் ஆலமில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கவிருந்த நான்கு இளைஞர்களைக் காப்பாற்றிய 41 வயதுடைய சார்ஜன் முஹமட் நோர் காலிட்டிற்கும் இவ்விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]