கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சாலை வரியைப் புதுப்பிக்கத் தவறியது மற்றும் காப்பீட்டுத் தொகை இல்லாதது போன்ற காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு வாகனங்களின் உரிமையாளர்கள் அதற்கான அபராதம் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து தொகையையும் செலுத்த வேண்டும்.
அதன் பின்னரே அவர்களின் வாகனங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்ததற்கான நடவடிக்கை எந்தவொரு விதி விலக்கில்லாமல் நடப்பில் இருக்கும் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இருப்பினும், சில உரிமையாளர்கள் வாகனத்திற்கான வருடாந்திர சாலை வரியை விட 300 ரிங்கிட் அபராதம் செலுத்தத் தயாராக இருப்பதாக அந்தோனி லோக் குறிப்பிட்டுள்ளார்.
''அதற்காக அவர் சம்மன் செலுத்துகிறார் என்றும் சாலை வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அர்த்தமல்ல. அவர் முதலில் சாலை வரி செலுத்த வேண்டும்..அவர் தமது சொந்த சாலை வரியை செலுத்த வேண்டும். பறிமுதலாகி விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு காப்பீடு இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.
கோலாலம்பூரில், Foodpanda உணவு நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றை இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் அந்தோணி லோக் அதனைக் கூறினார்.
சாலைப் பாதுகாப்பினை பொதுமக்கள் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்கவே இந்நடவடிக்கை அவசியம் என்று லோக் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]