சிப்பாங், 05 மே (பெர்னாமா) -- போக்குவரத்து அமைச்சும் எக்ஸ்பிரஸ் ரெயில் லிங்க் நிறுவனமும் இணைந்து, ஜூலை 31-ஆம் தேதி வரையில், மூன்று மாத காலத்திற்கு மைகேஎல்ஐஏ (MyKLIA) மற்றும் மைபுத்ராஜெயா (MyPutrajaya) என்ற இரண்டு மாதாந்திர பயண அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்,கேஎல்ஐஏ புத்ராஜயா மற்றும் சைபர்ஜயா ஆகிய இடங்களுக்கு இரயில் சேவை மூலம் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு மிகவும் மலிவான கட்டணத் தேர்வுகளை, அவை வழங்குவதாக அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
''இரண்டாவது திட்டமும், மேற்கு ஆசியாவில் நிகழ்ந்துவரும் விவகாரத்திற்கு ஒரு பதிலளிப்பாகும். ஏனெனில், அரசாங்க நிலையில் நாங்கள் பொது போக்குவரத்தின் பயன்பாட்டைக் ஊக்குவிக்க விரும்புகிறோம். மேலும், இது எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, இது கே.எல்.ஐ.எ-வில் உள்ள தொழிலாளர்கள் கார்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் நேரடியாக உதவும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று, கேஎல்ஐஏ 2-டில் அந்த மாதாந்திர அட்டைகளை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோக் அவ்வாறு தெரிவித்தார்.
மைகேஎல்ஐஏ மாதாந்திர பயண அட்டையின் மூலம், விமான நிலைய ஊழியர்கள் தங்களின் பயணங்களுக்கு ஏற்ப கணிசமான சேமிப்பைப் பெறலாம்.
கேஎல்ஐஏ முனையம் ஒன்று மற்றும் இரண்டில் இருந்து கே.எல் சென்ட்ரல் மற்றும் பண்டார் தாசிக் செலாத்தான் வரையிலான பயணத்திற்கு மாதக் கட்டணம் 250 ரிங்கிட் ஆகும்.
இதனிடையே, கேஎல்ஐஏ-வில் இருந்து புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் சாலாக் திங்கி இடையிலான பயணத்திற்கு 150 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.
மைபுத்ராஜெயா மாதாந்திர பயண அட்டையின் கீழ், புத்ராஜயா மற்றும் சைபர்ஜயாவிலிருந்து கே.எல் சென்ட்ரலுக்கான பயணக் கட்டணம் தற்போது 250 ரிங்கிட்டாகவும், கேஎல்ஐஏ-வுக்கான கட்டணம் 150 ரிங்கிட்டாவும் குறைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)