கோலாலம்பூர், 21 ஜூன் (பெர்னாமா) -- லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக் கடிதத்தைப் பெற்றுள்ளதாக மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ டாக்டர் ஜொஹரி அப்துல் உறுதிப்படுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் மக்களவைக் கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமர்வு இடங்களில் சில புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக, இன்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்,
இந்த அமர்வு இடமாற்றம், பெர்சத்து கட்சியின் தலைவரும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான டான் ஸ்ரீ முகிடின் யாசினை உள்ளடக்கியிருக்கும் என்று டான் ஶ்ரீ டாக்டர் ஜொஹரி அப்துல் குறிப்பிட்டார்.
முகிடினின் சொந்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடினின் அமர்வு இடத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. என்றும் அவர் நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பிரிவின் முன்வரிசையிலேயே தொடர்ந்து நீடிப்பார் என்றும் டாக்டர் ஜொஹரி விவரித்தார்.
நாடாளுமன்ற அட்டவணையின்படி, நாடாளுமன்றத்தின் 15-வது கூட்டத்தொடரின் இரண்டாவது தவணை நாளை ஜூன் 22 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]