விளையாட்டு

மலேசிய FA கிண்ண முதல் அரையிறுதியில் ஜோகூர் வெற்றி

20/07/2024 06:33 PM

அலோர்ஸ்டார், 20 ஜூலை (பெர்னாமா) -- மலேசிய FA கிண்ண காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகூரின் ஜேடிதி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், கெடாவுடன் மோதிய ஜேடிதி , இறுதி நிமிடங்களில் வழங்கபட்ட கூடுதல் நேரத்தில், வெற்றி கோலை அடித்து முதல் அரையிறுதியை அதற்கு சாதகமாக்கியது.

கெடா அலோர்ஸ்டார் அரங்கில், நடைபெற்ற இந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் கோல் அடிப்பதில், தொடக்கம் முதலே ஜேடிதி , முனைப்பு காட்டியது.

அதன் பலனாக, 24வது நிமிடத்தில் தனது இறக்குமதி ஆட்டக்காரரான ஒஸ்கார் அரிபஸ் மூலம் ஜேடிதி  அதன் முதல் கோலைப் போட்டு, 1-0 என முதல் பாதியை முடித்தது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் போடுவதற்கு தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், 87-வது நிமிடத்தில் கெடா அதற்கான கோலை அடித்தது.

1-1 என்று ஆட்டம் சமநிலையில் முடியும் என்று கணிக்கப்பட்டபோது, வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடங்களில் ரோமல் மோரலஸ் அடித்த கோல், 2-1 என்ற நிலையில் ஜேடிதி -யை வெற்றி பெறச் செய்தது.

இவ்விரு அணிகளுக்கான இரண்டாம் அரையிறுதி ஆட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜேடிதி அரங்கில் நடைபெறவிருக்கின்றது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)