காஜாங், 31 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஞாயிற்றுக்கிழமை செராஸ் பத்து 9 எனும் இடத்தில், பெண் ஒருவரைத் தாக்கியதாகவும், மேலும் பல வாகனங்களைத் தாக்கி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகவும் சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
25 மற்றும் 26 வயதான அவ்விரு ஆடவர்களும் புதன்கிழமை அதிகாலை மணி 4 அளவில் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 279 மற்றும் செக்ஷன் 326-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்கள் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தாமான் சௌஜானா இம்பியானில் தலைக்கவசத்தைப் பயன்படுத்தி பெண் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திவிட்டுத் தப்பித்துச் செல்ல அந்த சந்தேக நபர் வாகனத்தைப் பயன்படுத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஏ.சி.பி. நாஸ்ரோன் கூறினார்.
இருப்பினும் இச்சம்பவத்திற்கான நோக்கம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட இருவர் மீதும் முறையே 12 மற்றும் 22 குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான கடந்தகால குற்றப் பதிவுகள் உள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)