உலகம்

சாவ் பாவ்லோ புறநகர்ப் பகுதியில் விமான விபத்து; 60-க்கும் மேற்பட்டோர் பலி

10/08/2024 07:33 PM

பிரேசில், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சவ் பாவ்லோ புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை உள்நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 60-க்கும் மேற்பட்ட பயணிகளும் அதன் பணியாளர்களும் உயிரிழந்தனர்.

ஏடிஆர் 72-500 என்ற அந்த விமானம், வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதாக விமான கண்காணிப்பு தரவு அகப்பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

2283 விமானத்தில் இருந்த அதன் பணியாளர்கள் உட்பட 62 பயணிகளும் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட அந்த விமான நிறுவனமான, வோபாஸ் தனது ஆரம்பக்கட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அங்கு விரைந்த அவசரகால குழுவினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

கேஸ்வேவல், பரணவிலிருந்து புறப்பட்ட அவ்விமானம் சவ் பாவ்லோவின் முதன்மை அனைத்துலக விமான நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனிடையே, அந்த விமானத்தில் 58 பயணிகள் இருந்ததாக வோபாஸ் நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்த வேளையில், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்தின் இணையதளம் வெளியிட்ட அறிக்கையில் அந்த எண்ணிக்கை 57 பேராக மாற்றம் செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)