ஜெனீவா, 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இவ்வாண்டு, 31 நாடுகளில் காலரா நோய் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம், WHO அறிவித்துள்ளது.
உலகளாவிய காலரா நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் அதற்கு மோதல்கள் மற்றும் வறுமையே முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் WHO கூறியுள்ளது.
மோதல்கள், பெரிய அளவிலான புலம்பெயர்வு, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை காலரா நோய் பரவலை அதிகரிக்கின்றன.
குறிப்பாக, புறநகர் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவையில் குறைவான அணுகல் காரணமாக சிகிச்சையிலும் தாக்கம் ஏற்படுவதாக WHO கூறியது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை உலகளவில் சுமார் 4 லட்சத்து 9,222 நோய் சம்பவங்களும் 4,738 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்ததிருந்தாலும் இறப்பு விகிதம் சுமார் 46 விழுக்காடு அதிகரித்திருக்கின்றது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]